செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்

தஞ்சாவூர் : கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு, பெண் துாய்மை பணியாளர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பழைய மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பம் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று மின்ஊழியர்கள் சந்திரபோஸ், 34, சந்திரசேகர், 48, ஆகியோர், ஸ்ரீராம் நகரில், பழைய மின் கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பம் நட முயன்றனர்.

அப்போது, அருகில் இருந்த மற்றொரு மின் கம்பியில் இருந்து, திடீரென மின்சாரம் பாய்ந்து இருவரும் துாக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். சக ஊழியர்கள், அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் காயமடைந்தவர்களில் ஒருவருக்கு, செவிலியருக்கு பதிலாக, பெண் துாய்மை பணியாளர் ஒருவர் குளுக்கோஸ் செலுத்தினார். இதைப்பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில், செவிலியர்கள் செய்ய வேண்டிய பல்வேறு பணிகளை, துாய்மை பணியாளர்கள் செய்வதாகவும், முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement