கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு

ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், ஆட்டாங்குடி அருகே குயவனேந்தலைச் சேர்ந்தவர் காசிலிங்கம்.

கிராம தலைவரான இவர் நேற்று முன்தினம் மாலை ஊரில் நடந்த கிராம கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மக்கள் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, காலை டூ - வீலரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என, தெரியவந்தது.

அவரை தேடியபோது, ஊரிலிருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள சீமைக்கருவேல காட்டுப்பகுதியில் காசிலிங்கத்தின் டூ - வீலர் கேட்பாரற்று நின்றிருந்தது. காட்டுப்பகுதிக்குள் கழுத்து, மார்பில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு, காசிலிங்கம் இறந்து கிடந்தார். திருப்பாலைக்குடி போலீசார், அவரது உடலை மீட்டனர்.

காசிலிங்கத்தின் நெருங்கிய உறவினர் குடும்பத்தினருடன், சொத்து பிரச்னை தொடர்பாக பல ஆண்டுகளாக விரோதம் இருந்து வருகிறது. இந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement