கூட்டுறவு சங்கங்களின் புதிய தொழில்; வாடகைக்கு வர்த்தக வாகனங்கள்

2

சென்னை: தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ், 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவை,ரேஷன் கடைகளை நடத்துவது, பயிர் கடன் வழங்குவது, உரங்கள் விற்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.

நாடு முழுதும் பல கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அந்த சங்கங்களை, பல தொழில் செய்யும் சங்கங்களாக மாற்றும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதற்காக சங்கங்களுக்கு தேவைப்படும் நிதி, 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வாயிலாக, 4 சதவீத வட்டியில் கடனாக வழங்கப்படுகிறது.

அதற்கு மத்திய அரசு, 3 சதவீதம் மானியம் வழங்குகிறது. தமிழகத்தில் உள்ள சங்கங்கள், டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்களை வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குகின்றன.

இதனால், விவசாயிகள் பயன்பெறுவதுடன், சங்கங்களுக்கும் வருவாய் கிடைக்கிறது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்ல, தனியார் வாகனங்களில், அதிக வாடகை செலுத்துகின்றனர். எனவே, சங்கங்கள், வர்த்தக வாகனங்களையும் வாடகைக்கு விடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னன்குப்பம், சின்னகவுண்டம்பட்டி தொடக்க கூட்டுறவு சங்கங்கள், சிறிய வர்த்தக வாகனத்தை, கி.மீ., 10 ரூபாய் வாடகைக்கும்; இந்துார் சங்கம் கி.மீ., 20 ரூபாய்க்கும் வர்த்தக வாகனங்களை வாடகைக்கு விடுகின்றன.


இந்த வாகனங்களுக்கு தேவை இருப்பதால், பல சங்கங்களும், அவற்றை வாடகைக்கு விடும் பணியில் ஈடுபட உள்ளன.

Advertisement