போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!

8


நீலகிரி: நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த சிறுத்தை, சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு, யாரும் இல்லாத நிலையில் திரும்பிச் சென்றது.

நீலகிரியில் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால், கரடி, சிறுத்தை, புலிகள் போன்ற ஆபத்தான வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகம். நேற்றிரவு, இங்குள்ள நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை புகுந்தது. கதவு திறந்திருந்த நிலையில், சிறுத்தை ஸ்டேஷன் அறைகளுக்குள் ஒவ்வொன்றாக புகுந்து உலாவியது.
இதை ஸ்டேஷனின் ஒரு அறையில் இருந்த போலீஸ்காரர் கவனித்து விட்டார். அவரை கவனிக்காத சிறுத்தை, ஒரு சில வினாடிகள் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு, திரும்பிச் சென்றது. சிறுத்தை வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர், உடனடியாக முன் வாசல் கதவை அடைத்தார்.

சிறுத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்த சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


அனைத்து ஸ்டேஷன் போலீசாரும், இரவு நேரத்தில் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடுவட்டம் ஸ்டேஷனுக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement