காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கடந்த 4ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடந்த 22ம் தேதி இரவு அர்ச்சுணன் தபசு நாடகம் துவங்கியது. நாடகத்தின் தொடர் நிகழ்வாக 23ம் தேதி காலை, 6:00 மணிக்கு அர்ச்சுனன் வேடமிட்ட கலைஞர், 40 அடி உயர தபசு மரத்தில் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

தொடர்ந்து குறவஞ்சி, விராட பருவம், கிருஷ்ணன் துாது, அரவான் களபலி, கர்ணமோட்சம், பதினெட்டாம் போர் என்ற தலைப்பிலும் மஹாபாரத நாடகம் நடந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று காலை, வேகவதியாற்றங்கரையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடந்தது.

இன்று தருமர் பட்டாபிேஷகத்துடன் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாட்டை விழா குழுவினர் மற்றும் திரவுபதியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement