கள்ளக்காதலை கண்டித்த கணவர் 2 மகன்களை கொன்ற தாய் கைது
வாழப்பாடி:
கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால், இரு மகன்களை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, துக்கியாம்பாளையம், சின்னத்தம்பி வட்டத்தை சேர்ந்த கொத்தனார் விஜயகுமார், 40. இவரது மனைவி இளவரசி, 34. இவர்களது மூத்த மகன் விக்னேஷ்வரன், 6, இளைய மகன் சதீஷ்குமார், 3, ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் கழிவுக்கு பதில் தண்ணீர் நிரப்பியிருந்த செப்டிக் டேங்கில் வீசி, இளவரசி கொலை செய்தார். பாதி உடல் மூழ்கியிருந்த நிலையில், இளவரசி மீட்கப்பட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாழப்பாடி போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இளவரசிக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், 3 ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்தது. இளவரசியை, விஜயகுமார் கண்டித்துள்ளார். இதில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் இரு குழந்தைகளையும் தொட்டியில் வீசிவிட்டு, அவரும் குதித்துள்ளார். குழந்தைகள் இறந்தனர். இளவரசி, நீருக்குள் தாக்கு பிடிக்காமல் மேலே வந்தது விசாரணையில் தெரிந்தது. இளவரசி மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.