வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்றவர் கோர்ட்டில் 'எஸ்கேப்'

கோவை: கோவை அருகே நடந்த வழிப்பறி வழக்கில், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, தண்டனைக்கு பயந்து தப்பி ஓடினார்.

கோவை, சொக்கம்புதுார், ஸ்ரீநகரை சேர்ந்தவர் மகேஷ் மருதையா. இவர், அதே பகுதியில் உறவினருக்கு சொந்தமான, 'சந்திரா டிரேடர்ஸ்' டீத்துாள் கடையில் வேலை செய்தார். 2006, ஆக., 24ல், டீத்துாள் விற்பனை செய்த பணத்துடன் பைக்கில் சென்ற போது, மூவர் வழிமறித்து, மிளகாய் பொடி துாவி, அரிவாளால் வெட்டி, 1 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.

செல்வபுரம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட சேலம், மேட்டூரை சேர்ந்த செந்தில்குமார், 40, ரமேஷ், 35, மதிவாணன், 30, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்த நிலையில், ரமேஷ் இறந்து விட்டார்.

மதிவாணன் தலைமறைவாக உள்ளார். செந்தில்குமார் மீது விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. ஜாமினில் இருந்த செந்தில்குமார், தீர்ப்புக்காக கோர்ட்டில் ஆஜராக நேற்று முன்தினம் வந்தார்.

நீதிபதி அழைத்த போது, செந்தில்குமார் ஆஜராகவில்லை. தீர்ப்புக்கு பயந்து அவர் தப்பியது தெரிந்தது. செந்தில்குமாருக்கு, ஐந்தாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். செந்தில்குமாரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement