ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜூலையில் மெட்ரோ ரயில்

பெங்களூரு: பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையில் மெட்ரோ ரயில் சேவையை ஜூலை மாதம் துவக்க, மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையில் 18.82 கி.மீ.,க்கு, டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ரயில் பாதை பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதமே நிறைவு பெற்று விட்டன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனையும் நடத்தி, ரயில் சேவை துவங்கவும் ஒப்புதல் அளித்து விட்டார்.

ஆனால் இன்னும் புதிய பாதையில் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:

ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே இயக்க 14 ரயில்கள் தேவைப்படுகின்றன. சீனாவில் இருந்தும், மேற்கு வங்கத்தின் திதாதர் ரயில் அமைப்பு லிமிடெட்டில் இருந்தும் தலா ஒரு ரயில் வாங்கி உள்ளோம்.

இன்னொரு ரயில் திதாதரில் கட்டமைக்கப்பட்டு வந்தது. பேக்கேஜ் பணி நடந்து கொண்டு இருக்கிறது.

மூன்றாவது ரயில், மே மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த மூன்று ரயில்களை வைத்து, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒன்று வீதம் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.

மூன்றாவது ரயில் வந்ததும், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்ததும், ஜூலை மாதம் சேவை துவங்க முடிவு செய்து உள்ளோம்.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் 34 மெட்ரோ ரயில்கள் எங்களுக்கு கிடைக்கும். அதில் 14 ரயில்களை ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா பாதைக்கு பயன்படுத்துவோம். மற்ற ரயில்களை பற்றாக்குறை காலத்தில், வேறு பாதையில் இயக்குவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement