ரேணுகாதேவி கோவிலில் 101வது ஆண்டு கரக திருவிழா

மைசூரு: மைசூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இட்டிகே கூடு பகுதியில் உள்ள, ரேணுகா தேவி அம்மன் கோவிலில் 101வது ஆண்டு, கரக திருவிழா நேற்று துவங்கியது.

மைசூரு மிருககாட்சி சாலைக்கு எதிரே உள்ள, இட்டிகே கூடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள ரேணுகா தேவி கோவிலில் 101வது ஆண்டு கரக திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

கரக திருவிழாவை ஒட்டி, மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்; அரண்மனை வளாகத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, தலா ஒரு கரகம் தயாரிக்கப்பட்டு ரேணுகாதேவி கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. ரேணுகா தேவி கோவிலிலும், ஒரு கரகம் தயாரிக்கப்பட்டது.

இன்று முதல் 2ம் தேதி வரை, கோவிலில் உள்ள மூன்று கரகங்களுக்கும் சிறப்பு பூஜை நடக்க உள்ளது.

வரும் 3ம் தேதி சாமுண்டீஸ்வரி, கோட்டை மாரியம்மன் கோவில் கரகங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

அப்போது கரகங்களுக்கு மக்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.

கரக ஊர்வலம் முடிந்ததும், இரு கரகங்களும் ஸ்ரீரங்கப்பட்டணா காவிரி ஆற்றில் கரைக்கப்படுகின்றன. விழாவின் கடைசி நாளில் மைசூரு மன்னர் குடும்பத்தினர் மகாராணி பிரமோதா தேவி உடையார்; யதுவீர் ஆகியோர் சிறப்பு பூஜை செய்கின்றனர்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூரில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, ஏராளமான மக்கள் இறந்தனர்.

இதனை தடுக்க மன்னர் குடும்பத்தால், கரக திருவிழா நடத்தப்பட்டது. பின், பிளேக் நோய் காணாமல் போனது.

அதன் பின் ஒவ்வொரு ஆண்டும், கரக திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement