திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தக்கார் நியமனம் ரத்து

11

சென்னை: திருவண்ணாமலை கோவில் தக்கார் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தக்காராக ஜீவானந்தம் என்பவரை ஹிந்து சமய அறநிலையத்துறை நியமனம் செய்து உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டதாவது: பொது மக்கள், பக்தர்கள் தரப்பில் ஜீவானந்தத்தை தக்காராக நியமிக்க ஆட்சேபனை தெரிவித்தும் அவரே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிர்வாகத்திற்கு முதலில் அறங்காவலர்கள் குழு அமைக்க வேண்டும். பிறகு, குழுவில் இருந்து தலைவர் நியமனம் செய்ய வேண்டும் என்ற விதி ஜீவானந்தம் நியமனத்தில் மீறப்பட்டு உள்ளது. அரசியல் பின்னணி உடைய 5 பேர் அறங்காவலர் குழுவில் நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம். கோவில் அறக்கட்டளை சொத்து வாடகைதாரராக இருக்கும் ஜீவானந்தம் ஆதாயமடையும் வாய்ப்பு உள்ளதால், அவரை நீக்க வேண்டும். பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வாதத்தை ஏற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தக்காராக ஜீவானந்தம் நியமனம் செய்த ஹிந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement