இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தி.மு.க. அரசுக்கு தமிழக பா.ஜ., வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தி.மு.க., அரசு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

ஆசிரியர் தேர்வு ஆணையத்தின் மூலம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் வேலை கிடைக்காமல் வேதனையில் இருக்கிறார்கள்.

நியாயமாக கிடைக்க வேண்டிய ஆசிரியர் பணி அமையாமல் போனதால், தி.மு.க., அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்திய இவர்களில் பலர் 50 வயதைக் கடந்தும் இன்னும் ஆசிரியர் பணி கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

தங்கள் வாக்குறுதியை இதுநாள் வரை நிறைவேற்றாத திமுக அரசு, 2023-24 ல் அறிக்கையில் அறிவித்த 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை இன்னும் நிரப்பாமல் ஆசிரியர்களை வஞ்சித்து வருவது ஆசிரியர்களை மட்டுமல்ல மாணவர்களின் எதிர்காலத்தையும் கடுமையாக பாதிக்கும்.

ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறையால் தமிழகத்தின் அரசுப்பள்ளி மாணவர்கள் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், ஆரம்பக் கல்வியின் ஆணிவேராக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் பணி நியமனம் வழங்காமல் அவர்களை அலைகழிப்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும், கல்வித் தரத்தையும் கடுமையாக பாதிக்கும்.

இனியாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ஆசிரியர் தேர்வு மையத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிய நியமனம் வழங்கி, அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் வழங்க வழிவகை செய்ய வேண்டுமென தமிழக பா.ஜ., சார்பில் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement