சீமான் தலை இருக்காது வலைதளத்தில் மிரட்டல்

சென்னை:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்து, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 28ம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

அதில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும்; அவரது பதவிக்கு போட்டி நிலவும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் செய்தி தெரிவிப்பார்கள் எனக் குறிப்பிட்டு உள்ளார். நா.த.க., துவங்கிய நாள் முதல் இன்று வரை தெலுங்கு மக்கள் குறித்தோ, மற்ற எந்த தேசிய இன மக்கள் குறித்தோ இழிவாகவோ, அவதுாறாகவோ பேசியது கிடையாது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்ட சந்தோஷ் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் அடிப் படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement