வாழைத்தார்கள் விலை உயர்வு

மேட்டுப்பாளையம் : வாழைத்தார்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. இங்கு நேற்று நடந்த ஏலத்திற்கு காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து, 1500 வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், 20 வியாபாரிகள் பங்கேற்றனர். அதனால் வாழைத்தார்களை ஏலம் எடுப்பதில், வியாபாரிகளிடையே போட்டி ஏற்பட்டது. இதனால் ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாயும், தாருக்கு, 50 லிருந்து 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறியதாவது: பொதுவாக ஜூலை மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை, எட்டு மாதங்களுக்கு வாழைத்தார்கள் அறுவடை நடைபெறும். மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை வாழைத்தார்கள் அறுவடை அவ்வளவாக இருக்காது. அதிலும் ஏப்ரல், மே மாதங்களில் தார்களின் வரத்து மிகவும் குறைவாக இருக்கும். அந்த வகையில் இன்று (நேற்று) நடந்த ஏலத்துக்கு, 1500 வாழைத்தார்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் நேந்திரன் ஒரு கிலோ குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கும், அதிகபட்சம், 50 ரூபாய்க்கும், கதலி குறைந்தபட்சம், 25க்கும் அதிகபட்சம், 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம், கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

பூவன் ஒரு தார் குறைந்தபட்சம், 250, அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், ரஸ்தாலி, 250, அதிகபட்சம், 700க்கும், தேன் வாழை, 200, அதிகபட்சம், 700க்கும், செவ்வாழை குறைந்த பட்சம், 250, அதிகபட்சம், 900 ரூபாய்க்கும், மொந்தன், 150 அதிகபட்சம், 400க்கும், பச்சை நாடன் குறைந்தபட்சம், 200க்கும் அதிகபட்சம் 450 ரூபாய்க்கும் ஏலம் போனது.

பொதுவாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார்கள் எண்ணிக்கை குறைவாக வந்ததால், ஒரு தாருக்கு ஐம்பதிலிருந்து, நூறு ரூபாய் வரை விலை உயர்வாக ஏலம் போனது. ஜூலை மாதம் முதல் வாரம் வரை வாழைத் தார்களின் விலை உயர்வாகவே இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement