அட்சய திருதியை சிறப்பு திருமஞ்சனம் கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாளை அட்சய திருதி என்றழைக்கப்படுகிறது.

எல்லா நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் இந்த திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்து போற்றிக் கொண்டாடுகின்றனர்.

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.

கோயில் ஸ்தானீக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அட்சய திருதியை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் உப்பு, அரிசி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளை பூஜையறையில் வைத்து வழிபாடு செய்தனர்.

மகாலட்சுமி, குபேரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Advertisement