ஒலிபெருக்கி பாதிப்பு: தேவை நடவடிக்கை

தொண்டி: கோயில் திருவிழா, பொதுக்கூட்டங்களில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை, தொண்டி பகுதியில் கோயில் விழாக்கள் பொது நிகழ்ச்சிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதிலிருந்து வெளி வரும் சப்தங்கள் அதிக துாரம் கேட்கும் படியாக உள்ளது.

இந்த சப்தத்தால் வயதானவர்கள், நோயாளிகள் என பலர் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்க கூடாது என்ற தடை உத்தரவு அமலில் இருந்தும் தடையை மீறி சிலர் செயல்படுகின்றனர். இது குறித்து மக்கள் கூறியதாவது:

கூம்பு ஒலிபெருக்கியால் துாக்கமின்மை, டென்ஷன், மன அழுத்தம் போன்றவற்றால் நோய்கள் உருவாகும் நிலை உள்ளது. வயதானவர்கள், நோயாளிகள், ஏற்கனவே தங்களால் முடியாத நிலையில் மிகவும் சோர்வான நிலையில் இருப்பர்.

இந்த கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளில் ஏற்படும் சப்தம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். திருவாடானை, தொண்டி மற்றும் கிராமபுறங்களில் நடைபெறும் விழாக்களில் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது.

இவற்றை பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement