தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தேசிய மகளிர் ஆணையர் விசாரணை

மூணாறு: மூணாறில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தலைவர் விஜயாரஹாட்கர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.

கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான லெட்சுமி எஸ்டேட்டில் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தவர் தொழிலாளர்களின் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு டாடா கம்பெனி சார்பில் செயல்படும் ' ஸ்ரீஷ்டி' எனும் மையத்தை பார்வையிட்டார்.

மூணாறில் அரசு விருந்தினர் மாளிகையில் தோட்ட அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பெண் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் துயரங்களை சந்திப்பதாகவும், வழக்கமான வேலை நேரத்தை விட காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பணி செய்ய நேரிடுவதாகவும் பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் கூறினர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த பிற தொழிற்சங்கத்தினர் வழக்கத்தை விட முன்னதாக பணிக்கு செல்ல தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவது இல்லை, சூப்பர்வைசர்களின் வற்புறுத்தலுக்கு இணைங்க தொழிலாளர்கள் முன்னதாக பணிக்கு செல்வதாகவும் கூறினர்.

தவிர தேயிலை தோட்டங்களில் பெண் தொழிலாளர்களுக்கு கழிப்பறை வசதி மிகவும் அவசியம் என்பதை மகளிர் ஆணைய தலைவர் தோட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.

Advertisement