கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் விடிய விடிய அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் போலீசார் சிரமப்பட்டனர்.

கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 21 நாட்களுக்கு நடைபெறும். இந்தாண்டு ஏப். 16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படியில் அம்மன் எழுந்தருளி விதவிதமான அலங்காரத்தில் வீதி உலா வருவார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அக்னி சட்டி எடுத்தல் நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று வரை தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அக்னி சட்டி எடுத்தும், உருண்டு கொடுத்தல், ஆயிரம் கண் பானை, அலகு குத்தி வருதல் என நேர்த்தி கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கோயில் வெளிப் பிரகார கம்பத்திற்கு மஞ்சள்நீர் ஊற்ற பெண்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

பாரதியார் நகர், கிராம சாவடி தெரு, மணிநகரம், நாட்டுக்கல், ஆங்கூர்பாளையம் ரோடு, வடக்கு பட்டி, குட்டியாபிள்ளை வீதி, தியாகி வெங்கடாச்சலம் வீதி, போர்டு ஸ்கூல் தெரு, பார்க் ரோடு உள்ளிட்ட பல வீதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர்.

திருவிழாவில் பல்வேறு அமைப்பினர் நீர்மோர் வழங்கினார்கள். திருவிழா மே 6 வரை நடைபெறும். ஏற்பாடுகளை கிராம கமிட்டியாரும், ஹிந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

Advertisement