கேஸ் நிறுவனத்தின் 'பி.எஸ்., - 5' இயந்திரங்கள் உற்பத்தி துவக்கம்

'கேஸ்' கட்டுமான இயந்திர நிறுவனம், 'பி.எஸ்., - 5' உமிழ்வு விதிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட முதல் கட்டுமான இயந்திரத்தை மத்திய பிரதேசத்தின் பிதாம்பூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்துள்ளது. முதற்கட்டமாக காம்பாக்டர்கள் மற்றும் லோடர்களின் உற்பத்தி துவங்கியது.

இந்த இயந்திரங்களில் வழங்கப்படும், 'எப்.பி.டி., எப்28' என்ற இன்ஜின், கட்டுமான இயந்திரங்களுக்கான 'பி.எஸ்., - 5' விதிமுறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த உமிழ்வு, எரிவாயு சிக்கனம் மற்றும் அதிக பணியை மேற்கொள்ளும் வகையில் இந்த இன்ஜின் மாற்றப்பட்டுள்ளது.

பேக்ஹோ லோடர், எக்ஸ்கவேட்டர், காம்பாக்டர், மோட்டார் கிரேடர் ஆகிய இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், ஏற்றுமதி 50 சதவீத பங்கை வைத்துள்ளது. இந்தியாவில் இருந்து 20,000 இயந்திரங்களை, 120க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த ஆலையில், ஒரு நாளுக்கு, 18 லோடர்கள் மற்றும் 6 காம்பாக்டர் இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Advertisement