ஈரோடு, வேலுார் உட்பட 5 நகரங்களில் வெயில் சதம்

சென்னை:தமிழகத்தில் நேற்று, ஈரோடு, வேலுார் உள்ளிட்ட ஐந்து நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில், வரும் 5ம் தேதி வரை மிதமான மழை பெய்யலாம். 4, 5ம் தேதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒருசில இடங்களில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

வெயில் சதம்



நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக வேலுாரில், 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

இதற்கு அடுத்தபடியாக, ஈரோட்டில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ், கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் வாட்டியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement