பாகிஸ்தானுக்கு உளவுவேலை; ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் கைது

8


ஜெய்சல்மர்: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உளவு வேலை பார்த்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை உளவுத்துறையினர் கைது செய்தனர்.



பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.


இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க மத்திய அரசும் ஆயத்தமாகி வருகிறது. எனவே, எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இருநாடுகளின் எல்லைகளில் உள்ள கிராம மக்கள், பதுங்கு குழிகளை தயார் செய்து வைத்து வருகின்றனர்.


இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு, இந்தியா குறித்த ரகசியங்களை, உளவு பார்த்து தகவல் கொடுத்து வந்த நபரை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் வசித்து வந்த பதன் கான் என்பவரை உளவுத்துறை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவன் கடந்த 2013ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று வந்தது முதல், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பணம் மீதான ஆசையால் உளவு பார்ப்பதற்கான பயிற்சியை பாகிஸ்தானில் பெற்றுள்ளார். 2013ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்த பதன் கான், ஜெய்சல்மர் சர்வதேச எல்லை தொடர்பான ரகசியங்களை பகிர்ந்து வந்துள்ளதாக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement