மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி; டில்லியில் சோகம்

1


புதுடில்லி: தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. குடியிருப்பின் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் தாய் என 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


டில்லியில் இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டில்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம், குளம்போல தேங்கியுள்ளது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மிதந்தபடி, மெதுவாக செல்கின்றன.


குறிப்பாக, புழுதி காற்றும் வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகவும், சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன.


இதனிடையே, டில்லிக்கு ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் பிறப்பித்தது. அதன்பிறகு, அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு, ஆரஞ்ச் அலர்ட்டாக விடுக்கப்பட்டது.


இடி, மின்னலுடன் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணிநேரத்திற்கு, 70 கி.மீ., முதல் 80 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது


இந்த நிலையில், துவர்கா பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அமைந்துள்ள குடியிருப்பின் மீது மரம் சாய்ந்து விழுந்துள்ளது. இதில், 3 குழந்தைகள் மற்றும் தாய் என 4 பேர் உயிரிழந்தனர். கணவர் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும், காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement