என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் மன்னர்களாக உருவாகினர்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

9


பாகல்பூர்: ''என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் எல்லாம் மாபெரும் தலைவர்களாக, மன்னர்களாக உருவாகினர்,'' என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசினார்.


பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், ஜன் சுராஜ் கட்சித்தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:
என் பெயர் பிரசாந்த் கிஷோர். நான் அரசியல் தலைவரல்ல. நான் சாதாரண குடும்பத்தின் மகன். என் தாத்தா பீகாரில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சாதாரண தொழிலாளி. என் தந்தை அரசு டாக்டராக இருந்தவர்.


கடந்த பத்தாண்டுகளில் நான் யார் கைகளை பிடித்தேனோ, யாருக்கெல்லாம் ஆலோசனை கூறினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றி பெற்றனர். மன்னர் ஆகினர். ஆனால் பத்தாண்டுகளாக அதை செய்த பிறகு, மூன்றாண்டுக்கு முன் அந்த வேலையில் இருந்து வெளியில் வந்து விட்டேன்.


நான் மாபெரும் தலைவர்களை உருவாக்கினேன். பெரிய கட்சிகளை வெற்றி பெறச் செய்தேன். ஆனால் அவை எல்லாம், மக்கள் வாழ்க்கையை மாற்றவில்லை.
அதனால் தான் நான் அந்த வேலையில் இருந்து வெளியே வந்தேன்.

என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் எல்லாம் மன்னர்களாக ஆகும்படியான அறிவையும் சக்தியையும் கடவுள் எனக்கு அளித்திருக்கும்போது, நான் அத்தகைய ஆலோசனையை பீகார் மக்களுக்கும் வழங்க விரும்பினேன். நான் உங்கள் கையை பிடித்து உங்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

Advertisement