பாலாற்று மணலில் பதுக்கிய 101 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆற்காடு:ஒடிசாவிலிருந்து, 101 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, பாலாற்றில் புதைத்து வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு டவுன் போலீசார் நேற்று முன்தினம் மாலை, செய்யாறு கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, பதிவெண் இல்லாமல் ஒருவர் ஓட்டி வந்த பைக்கை நிறுத்தி விசாரித்தனர்.

அவர், ஒடிசா மாநிலம், சித்திர கொண்டா தாலுகா, கனிகரை படாவை சேர்ந்த பிஜய்குமார் கில்லா, 20, என்பதும், ஆந்திர மாநிலம், சித்துார் வரை லாரியில் கஞ்சா கடத்தி வந்து, அங்கிருந்து ஆற்காடு பைபாஸ் சாலை வழியாக பைக்கில், ஆற்காடு பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து, 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் ஆற்காடு பாலாற்று மணலில் புதைத்து வைத்திருந்த, 90 கிலோ கஞ்சா உட்பட மொத்தம், 101 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பிஜய்குமார் கில்லாவை கைது செய்தனர்.

Advertisement