விவசாய உபகரணங்கள் கடையில் தீ விபத்துரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

குளித்தலை:தரகம்பட்டியில், சொட்டுநீர் பாசனத்திற்கு தேவையான குழாய்கள், உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.

குளித்தலை அடுத்த, மைலம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை, இவருக்கு சொந்தமான இடத்தில் தோகைமலையை சேர்ந்த அறிவழகன் என்பவர், சொட்டுநீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் பிவிசி பைப்புகள் மற்றும் டியூப் உள்ளிட்ட உபகரணங்களுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சீஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் பொலிரோ சரக்கு ஏற்றும் வேன் நிறுத்தி வைத்திருந்தார்.

இவரது விற்பனை நிலையத்தில், நேற்று காலை சொட்டுநீர் பாசன குழாய்கள் மற்றும் தண்ணீர் பம்ப் பைப்புகள் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கின. உடனே அங்கிருந்த சிலர், சில பொருட்களை வெளியே எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தீ மளமளவென பரவி வானுயரத்திற்கு கரும்புகையுடன் பற்றி எரிந்தது.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும், ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வராததால் அங்கிருந்த பொதுமக்கள், அருகிலுள்ள விவசாய நிலங்களில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுக்க கடுமையாக போராடினர். தீ விபத்தில் எரிந்த சரக்கு ஏற்றும் பொலிரோ வேன் மற்றும் பொருட்களின் சேத மதிப்பு, 15 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது,
தீ விபத்து குறித்து, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement