128 வயதான யோகா குரு காலமானார்; பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

8


புதுடில்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல யோகா குரு பாபா சிவானந்த். இவருக்கு வயது 128. இவர் நேற்றிரவு வாரணாசியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் உயிரிழந்தார். ஹரிச்சந்திர காட்டில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.

பாபா சிவானந்த் ஆகஸ்ட் 8ம் தேதி, 1896ம் ஆண்டு வங்கதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஆறு வயது இருக்கும் போதே, அவரது பெற்றோர் உயிரிழந்தனர். ஆசிரமத்தில் சேர்ந்த இவர் ஆன்மிக வாதியாக மாறினார். யோகா பயிற்சி அளித்து வந்தார்.



கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தையொட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இவர் யோகா செய்து அசத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இவர் குறித்து அனைத்து செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டு இருந்தது.

தலைவர்கள் இரங்கல்



இவரது மறைவுக்கு, பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:



யோகா பயிற்சியாளரும் காசியில் வசிப்பவருமான சிவானந்த் பாபாஜியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. யோகா மற்றும் தியானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.


யோகா மூலம் சமூகத்திற்கு சேவை செய்ததற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத் இரங்கல்

''யோகா துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்த காசியின் புகழ்பெற்ற யோகா குரு சிவானந்த்ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது'' என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement