ரூ.90 லட்சம் மோசடி புகார் 'மாஜி' பஞ்., தலைவர் மீது வழக்கு

திருச்சி: பணிகளை செய்யாமல், செய்ததாக கூறி பஞ்சாயத்து நிதியில், 90 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், வளநாடு முன்னாள் பஞ்., தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி யூனியனுக்கு உட்பட்ட வளநாடு கிராம பஞ்., தலைவராக வெங்கடேசன் என்பவர், கடந்த, 2020ம் ஆண்டு முதல், 2024ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

இவரது பதவிக்காலத்தில், புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் புதிய பைப்லைன் அமைத்ததாக கூறியும், சாலை போடாமல், போட்டதாக கூறியும், 90 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரிய வந்தது.

இதுகுறித்து வளநாட்டை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர், நிதிமோசடியில் ஈடுபட்ட வெங்கடேசன் மீது வழக்கு பதிய, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, நிதி மோசடி நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வளநாடு முன்னாள் பஞ்., தலைவர் வெங்கடேசன் மீது வழக்கு பதிந்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.

Advertisement