12 பேர் மீது காரால் மோதியவர் ஒருவர் பலியானதால் கைது

ராமநாதபுரம்: பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் ராமநாதபிரபு, 26. இவர் நேற்று முன்தினம் தன் காரில், தெற்கு தரவையில் உள்ள தன் மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த உப்பு லாரி, திடீரென இவரின் கார் மீது மோதியதில் கார் கண்ணாடி உடைந்தது.

லாரி டிரைவர் கார்த்திக் என்பவருக்கும், ராமநாத பிரபுவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள், ராமநாதபிரபுவுக்கு எதிராகவும், லாரி டிரைவருக்கு ஆதரவாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபம் அடைந்த ராமநாதபிரபு, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீது காரை மோதினார். இதில், சாத்தையா, பழனிகுமார் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சாத்தையா, நேற்று காலையில் பலியானார். இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த கேணிக்கரை போலீசார், ராமநாதபிரபுவை கைது செய்தனர்.

Advertisement