பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரயிலில் 'பவர் கட்' பயணிகள் அவதி

விருதுநகர்: பெங்களூரு கன்டோன்மென்ட் -- மதுரை வந்தே பாரத் ரயிலில் மின்சாரம் தடைபட்டதால் நடுவழியில் நின்றது. இதனால் கதவுகளை திறக்க முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மதுரை -- பெங்களூரு கன்ட்டோன்மென்ட் -- மதுரை இடையே திருச்சி வழியாக தினமும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

நேற்று மதியம் 1:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்ட ரயில் (20672) இரவு 7:10 மணிக்கு திருச்சியை நெருங்கிய போது மின்சாரம் தடைபட்டு நடுவழியில் நின்றது.

இதனால் கதவுகளை திறக்க முடியாமல் இருளால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் திருச்சி ஸ்டேஷனில் இருந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெட்டிகளின் கதவுகளை திறந்தனர். மழைப் பொழிவால் பிரச்னையை சரிசெய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ஒன்றரை மணிநேரம் நடுவழியில் நின்றது. பின்னர் சரிசெய்யப்பட்டு இரவு 8:50 மணிக்கு திருச்சி வந்தது. அங்கிருந்து இரவு 8:55 மணிக்கு மதுரை புறப்பட்டது.

நேற்று முன்தினம் எழும்பூர் -- நாகர்கோவில் -- எழும்பூர் வந்தே பாரத் ரயில் தொழில்நுட்பக் கோளாறால் 3:00 மணி நேரம் தாமதமாக பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement