அரைகுறை மழைநீர் வடிகால்வாய் பணி திருவொற்றியூர் மேற்கில் வெள்ள அபாயம்?

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சியில், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்துார் உள்ளிட்ட மண்டலங்களில், கொசஸ்தலை வடிநில திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியான 3,220 கோடி ரூபாய் நிதியில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.

அதன்படி, தெரு மற்றும் மழைநீர் தேக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 5 அடி அகலம் முதல் 50 அடி அகலம் வரை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், மணலி விரைவு சாலையையொட்டிய கலைஞர் நகர் சந்திப்பு - சுப்பிரமணியம் நகர் வரையிலான, 350 அடி துாரத்திற்கு, மழைநீர் வடிகால் பணி விடுபட்டு உள்ளது.

இது குறித்து, பகுதிவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், ஓராண்டிற்கும் மேலாக பணி கிடப்பில் உள்ளது.

திறந்தவெளியாக, புதர்மண்டி கிடக்கும் கால்வாய் தெரியாமல், நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் தவறி விழுகின்றன. மேலும், அருகேயே, டாஸ்மாக் கடை செயல்படுவதால், 'குடி'மகன்கள் தவறி விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக, விடுபட்ட இந்த வடிகால் பணியால், பகிங்ஹாம் கால்வாய் நோக்கி, மழைநீர் செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

பெருமழை கொட்டித்தீர்த்தால், நிச்சயம் மழைநீர் தேங்கி, திருவொற்றியூர் மேற்கு பகுதி முழுதும் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, வெயில் காலத்திலேயே இந்த பணிகளை முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement