வாய்க்கொழுப்பால் சிக்கிய 'யு டியூப்' பிரபலங்கள்

3


புதுடில்லி : முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்த, சமய் ரெய்னா உட்பட சமூக ஊடக 'இன்ப்ளூயன்சர்'கள் ஐந்து பேரை நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
'இந்தியா காட் லேடன்ட்' என்ற 'யு டியூப் சேனல்' நிகழ்ச்சியில், பெற்றோர் குறித்து தரக்குறைவான கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் சமய் ரெய்னா.

இவர், சில சமூக ஊடக இன்ப்ளூயன்சர்களுடன் சமீபத்தில் யு டியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, முதுகெலும்பு தசைநார் சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டோர் குறித்து ஏளனமான கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கியூர் எஸ்.எம்.ஏ., பவுண்டேஷன் ஆப் இந்தியா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர் சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரிய வகை நோயான முதுகெலும்பு தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டோர் குறித்து இந்த சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் கூறியுள்ள கருத்துகள் கண்டனத்துக்குரியவை. இவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்கும்.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாரும், யாரை பற்றியும் எதையும் பேசிவிட முடியாது.

தரக்குறைவாக பேசிய சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பும்படி மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடுகிறோம். மீறினால் கடும் நடவடிக்கை பாயும்.

இவ்வாறு உத்தர வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement