முதல்வர் தொகுதியில் ரவுடி குத்திக்கொலை

மைசூரு: முதல்வர் சித்தராமையாவின் தொகுதியான வருணாவில், ரவுடி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மைசூரு டவுன் கியாத்தமாரனஹள்ளியைச் சேர்ந்தவர் கார்த்திக், 33. ரவுடி. கொலை முயற்சி வழக்கில் சிறையில் இருந்த கார்த்திக், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வந்தார்.

நேற்று முன்தினம் இரவு தன் ஜீப்பில், மைசூரு அருகே வருணாவில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார். ஹோட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த இருவர், கார்த்திக்கிடம் தகராறு செய்து, அவரை பிடித்து கீழே தள்ளி தாக்கினர்.

அந்த நேரத்தில் அங்கு ஒரு காரில் வந்த மேலும் 3 பேரும், கார்த்திக்கை தாக்கினர். கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். பலத்த காயம் அடைந்த, கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெண் விவகாரத்தில் கார்த்திக்கிற்கும், பிரவீன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்டது.

பிரவீனுக்கு, கார்த்திக் கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

தன்னை கொன்று விடுவார் என்ற பயத்தில் கார்த்திக்கை, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரவீன் கொன்றது, விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள 5 பேரையும் வருணா போலீசார் தேடி வருகின்றனர்.

கார்த்திக் கொலை செய்யப்பட்ட காட்சிகள், ஹோட்டல் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

வருணா முதல்வர் சித்தராமையாவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் தொகுதியிலேயே ரவுடி கொலையாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement