திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்

1

பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று துவங்கியது.

கேரளா மாநிலம், திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது.

நேற்று காலை, 9:00 மணிக்கு, நெய்தலைக்காவு பகவதி அம்மன் உருவச்சிலை குற்றூரில் இருந்து, ஆடை, ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது, வடக்கு நாதர் சன்னிதி நோக்கி புறப்பட்டார்.

செண்டை மேளத்துடன், வழித்தடத்தின் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். மதியம், 12:00 மணிக்கு மணிகண்டனால் பகுதியை வந்தடைந்த அம்மன், கணபதி கோவில் அருகே நின்றதும் செண்டை மேளம் முழங்கத் தொடங்கியது.

அதை மேளதாளத்துடன் மணிகண்டனால் பகுதியில் இருந்து, அம்மன் வடக்கு நாதரின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, 12:45 மணிக்கு பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து, தெற்கு கோபுர நடை வழியாக வெளியேறிய யானை, தும்பிக்கையை உயர்த்தி மூன்று நாள் பூரம் திருவிழாவை அறிவித்தது.

இன்று, 6ம் தேதி காலை இதே கோபுர நடை வாயிலாக, கணிமங்கலம் சாஸ்தா யானை மீது எழுந்தருளுவதுடன் பூரத்தின் முக்கிய நாளின் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாகும்.

திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும், குடை மாற்றும் நிகழ்வும், இன்று மாலை நடக்கிறது. அதை தொடர்ந்து, பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.

முன்னதாக, விழாவை முன்னிட்டு, பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர், போட்டிபோட்டு நடத்தும் யானைகளின் ஆடை, ஆபரண அலங்காரப் பொருட்களின் கண்காட்சியான 'யானை சமயம்' நேற்று துவங்கியது. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

Advertisement