'காசு கொடுத்தாலும் உசுரு கிடைக்குமா?' அமைச்சரிடம் கதறியழுத பெண்மணி

17

திருப்பூர்: தம்பதி விபத்தில் பலியான இடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழியிடம், தம்பதியின் பெண் உறவினர் கதறியழுதார்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம், குள்ளாயிபாளையத்தில் ரோடு விரிவாக்க பணிக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தாராபுரத்தில் இருந்து டூவீலரில் குண்டடத்துக்கு திரும்பி கொண்டிருந்த நாகராஜ், 44 - ஆனந்தி, 38 ஆகியோர், அங்கு தோண்டப்பட்டிருந்த 12 அடி ஆழ குழிக்குள் விழுந்து பலியாயினர். மகள் தீக்ஷிதா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முறையாக தடுப்புகளை வைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் விபத்து நிகழ்ந்ததால், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் கணேஷ், உதவி ஒப்பந்ததாரர் சிவக்குமார், சைட் இன்ஜினியர் கவுதம், சைட் சூப்பர்வைசர் குணசேகரன் என, நான்கு பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விபத்து நடந்த இடத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார். அப்போது, பலியான தம்பதியரின் பெண் உறவினர் ஒருவர்,''எத்தனை காசு கொடுத்தாலும் உசுர வாங்க முடியாது. இப்ப செய்கின்ற தடுப்பு பணிகளை முன்னாடியே செஞ்சிருந்தா, உசுரு போயிருக்காது'' என்று கதறினார்.

அமைச்சர் பெண்ணை சமாதானப்படுத்தினார்.

ரோடு விரிவாக்கத்துக்கு தோண்டப்பட்ட இடத்தில் முறையாக தடுப்புகளை வைத்தும், 100 மீட்டருக்கு முன்னதாக எச்சரிக்கை பலகை வைக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Advertisement