அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவிக்கப்பட்டவை சலுகை அல்ல; போட்டுடைத்த அரசு ஓய்வூதியர் சங்கம்

1

கோவை: ''அகவிலைப்படி என்பது, ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுக்கப்படுவதாகும். அதை, 110 விதியின் கீழ் அறிவித்து, அரசு ஊழியர்களை தி.மு.க., அரசு ஏமாற்றுகிறது,'' என, அரசு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பலராமன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில், தமிழக முதல்வர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, பண்டிகை கால முன்பணம், மகப்பேறு விடுப்பு, உள்ளிட்ட ஒன்பது சலுகைகளை, 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இதற்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பலராமன் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் அனைவரும், தமிழக அரசிடம் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதை நிறைவேற்றுவதாக, கடந்த சட்டசபை தேர்தலில் தி.முக., தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை முதல்வர் எப்போது அறிவிப்பார் என்று, அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அகவிலைப்படி என்பது, ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுக்கப்படுவதாகும். புதிதாக கொடுப்பது போல், 110 விதியின் கீழ் அறிவித்து, தி.மு.க., அரசு அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறது.

அதே போல் சரண்டர் விடுப்பு, பண்டிகை கால முன் பணம் இவை எல்லாம் ஏற்கனவே இருப்பதுதான். ஆனால் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது ஒன்றும் சலுகை அல்ல; திருப்பி செலுத்த கூடியவை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை, 110 விதியில் அறிவித்து இருந்தால் சந்தோஷப்படலாம். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை தவிர, வேறு ஒன்றுமில்லை. இதை எல்லாம் அரசு ஊழியர்களுக்கு சலுகையாக வழங்குவது போல், தி.மு.க., அரசு ஒரு மாயையை உருவாக்கி வருகிறது.

அரசு ஊழியர்களின் பழைய பென்ஷன் கோரிக்கையை நிறைவேற்றாமல், ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த அரசு ஊழியர்களை, ஏமாற்றி வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement