நிதி நிறுவனத்தில் இழந்த நகைகளை மீட்டுத்தர கிராம மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த கிராம மக்கள், தலைமறைவாக உள்ள தனியார் நிதி நிறுவனத்தினர் இடமிருந்து அடகு வைத்த தங்க நகைகளை மீட்டுத்தர வலியுறுத்தினர்.

திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெண்கள் சிறிதுநேரம் நகையை மீட்டுத்தர வலியுறுத்தி ஒப்பாரி வைத்தனர். மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 2012ல் திருப்புல்லாணியில் நியூ செல்வி கோல்டுலோன் நிதி நிறுவனம் 300க்கு மேற்பட்டவர்களிடம் ரூ.பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் பெற்றனர்.

அதன்பிறகு சில நாட்களில் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். போலீசில் புகார் செய்து மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது வரை தங்க நகைகளை பெற்றுத்தரவில்லை.

2015ம் ஆண்டில் நிதி நிறுவனத்தினர் தங்க நகைகளை தருவதாக கூறினார். ஆனால் 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் யாருக்கும் தரவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்க நகைகளை மீட்டுத்தந்திட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement