பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க பா.ஜ., கோரிக்கை

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாதவர்கள், காலாவதியான விசாக்கள் வைத்திருப்பவர்கள், இடை நிறுத்தப்பட்ட விசாக்கள் வைத்திருக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என பா.ஜ.,வினர் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் முரளிதரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு இடம் மனு அளித்தனர்.

இதில் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்., 22ல் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் உதவியுடன் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.

இதையடுத்து உள்துறை அமைச்சக உத்தரவின்படி பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கப்பட்ட விசா சேவைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், காலாவதியான விசாக்கள், இடை நிறுத்தப்பட்ட விசாக்கள் வைத்திருப்பவர்கள், என அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காண வேண்டும்.

தாமதமின்றி பட்டியலிட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம்: முன்னதாக மாவட்ட பா.ஜ., சார்பில் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத்தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். சிறப்பு பேச்சாளர் மாநில துணைத்தலைவர் புரட்சிகவிதாசன், மாநில பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராம் முன்னிலை வகித்தனர்.-

மாநில பொருளாதார பிரிவு செயலாளர் சண்முகநாதன், ஓ.பி.,சி., அணி மாவட்ட செயலாளர் சந்திரகுமார், முன்னாள் மாவட்டத் தலைவர் நாகராஜ், நகராட்சி கவுன்சிலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement