பந்தலுாரில் வீடுகள், காரை சேதப்படுத்தி சென்றது யானை; தமிழக - கேரள எல்லையில் மக்கள் மறியல்

பந்தலுார் : பந்தலுார் அருகே நெலாக்கோட்டையில் காட்டு யானை, இரு வீடுகள், காரை சேதப்படுத்தியதால் மக்கள் இரு மாநில எல்லையில் மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை முகாமிட்டு, இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளது. இந்த யானை இதுவரை மக்களை தாக்கியதில்லை.

நேற்று காலை, 7:15 மணிக்கு செய்தலவி என்பவரின் வீட்டின் பின்பக்க தடுப்பு சுவரை இடித்து சேதப்படுத்திய யானை, மேலும் ஒரு வீட்டை முழுமையாக சேதப்படுத்தியது.

தொடர்ந்து, யானை நடைபாதையில் வருவதை பார்த்து, தலைதெறிக்க ஓடியதில் சவுகத், 60, என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரையும் யானை சேதப்படுத்தியது.

இந்நிலையில், இப்பகுதியில் யானை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, உஸ்மான் என்பவர் தலைமையில், தமிழக - கேரள சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன், டி.எஸ்.பி., ஜெயபாலன், வனச்சரகர் ரவி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.

அதில், 'வரும், 9-ம் தேதி வன அலுவலர் முன்னிலையில் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட மக்கள், போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால், தமிழகம் - கேரளா இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானைகள் குடியிருப்பு மற்றும் சாலைக்கு வராமல் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement