விதவிதமான பொய்களை சொல்லி ரூ.1.56 கோடி சுருட்டிய 6 பேர் கைது

சென்னை: பங்கு சந்தை முதலீடு, கனடாவில் வேலை, வெளிநாட்டு மாப்பிள்ளை என, விதவிதமான பொய்களை கூறி, 1.56 கோடி ரூபாய் மோசடி செய்த, டில்லி, குஜராத் மற்றும் உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையை சேர்ந்த பெண் ஒருவர், திருமண இணையதளம் வாயிலாக வரன் தேடி உள்ளார். அதன் வாயிலாக, நிக்கி மார்ட்டின் என்ற பெயரில், ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.
வெளிநாட்டில் டாக்டராக இருப்பதாக கூறிய அவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். பின், இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.
மோசடி
சமீபத்தில் இந்தியா வருவதாக தெரிவித்த அந்த நபர், 'தங்கம் எடுத்து வந்துள்ளேன். அதை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விட்டனர். அதை விடுவிக்க, 15 லட்சத்து, 62,000 ரூபாய் தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, அந்த பெண் பணத்தை அனுப்பி உள்ளார். அதன்பின்னரே மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, '1930' என்ற எண்ணில், மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தில் புகார் செய்துள்ளார்.
அதேபோல, திருமண இணையதளம் வாயிலாக, மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு, சரண்யா என்ற பெயரில் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறிய அந்த பெண், தான் அதிகாரமிக்க பதவியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தன் செல்வாக்கை பயன்படுத்தி, உங்களின் சகோதரருக்கு பிரிட்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வங்கி மேலாளர் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை அதே மாவட்டத்தில் உள்ள, தனியார் நிறுவன இயக்குநர் என்று கூறியுள்ளார்.
'நீங்கள் காசோலை புத்தகம் தராததால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. நான் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தி விடுங்கள்' என, நம்ப வைத்து, 51.59 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
முதலீடு
அதேபோல, மதுரையை சேர்ந்த நபர் ஒருவரின், 'வாட்ஸாப்' எண், பங்கு சந்தை முதலீடு தொடர்பான குழு ஒன்றில் இணைக்கப்பட்டு உள்ளது. அதில், 'லிங்க்' ஒன்றும் அனுப்பப்பட்டு உள்ளது.
அதை 'கிளிக்' செய்து, சிறிய தொகை முதலீடு செய்ததும் லாபம் கிடைத்துள்ளது. இதை நம்பி, அதிக தொகை கிடைக்கும் என, 87.40 லட்சம் ரூபாயை முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார்.
இப்புகார்கள் மீது, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் உத்தரவின்படி, மதுரை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில், விதவிதமான பொய்களை கூறி, 1.56 கோடி ரூபாய் மோசடி செய்த, உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த இஷு ஷர்மா, 27; டில்லியை சேர்ந்த மம்தா ராணி, 37; பார்தீப், 27; அஜைப் சிங், 57; குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் ஹகபாய் ப்ரேம்ஜிபாய், 28; லோகேஷ் குஷிராமணி, 25 ஆகியோரை, நேற்று கைது செய்துள்ளனர்.


மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்