பள்ளிகளில் போர்க்கால ஒத்திகை மாணவ - மாணவியர் பங்கேற்பு

புதுடில்லி:டில்லி மாநகர் முழுதும் பள்ளிகளில் நடந்த போர்க்கால ஒத்திகையில், மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுதும் போர்க்கால ஒத்திகை நடத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி, தலைநகர் டில்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் நேற்று போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டன.

டில்லி மாநகரில் அனைத்துப் பள்ளிகளிலும் நடந்த ஒத்திகையில், மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சாகேத் அமிட்டி பள்ளியில் காலை 8:45 மணிக்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பள்ளி முதல்வர் திவ்யா பாட்டியா, போர்க்கால ஒத்திகை குறித்து மாணவ - மாணவியருக்கு விளக்கம் அளித்தார்.

பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பின், வகுப்பறைகள் மற்றும் மைதானத்தில் போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது.

சைரனுடன் துவங்கிய ஒத்திகையில், மாணவர்கள் மின் சாதனங்களை அணைத்துவிட்டு மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். மேலும் சிலர் சுவர் அருகே ஒளிந்தனர். சைரன் நின்றதும், தங்கள் புத்தகைப் பையை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு அமைதியாக பாதுகாப்பான பகுதிக்கு நகர்ந்தனர்.

சில மாணவர்கள் வீட்டில் அவசரநிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

கிழக்கு கைலாஷ் நகர், தாகூர் சர்வதேச பள்ளியில் நடந்த ஒத்திகையை பார்வையிட்ட

பா.ஜ., - எம்.எல்.ஏ., ஷிகாராய், மாணவர்களைப் பாராட்டினார்.

இந்த போர்க்கால ஒத்திகைக்கு டில்லி அரசு, 'ஆப்பரேஷன் அபியாஸ்' என பெயர் சூட்டியிருந்தது.

டில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள், ஹோம் கார்ட்ஸ், என்.சி.சி., உட்பட பல்வேறு குழுவினர் டில்லி முழுதும் பள்ளிகளில் போர்க்கால ஒத்திகை நடத்தினர்.

பள்ளிகளில் நடந்த ஒத்திகை குறித்து போட்டோக்களுடன் கூடிய அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

Advertisement