பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து; மருத்துவ ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு

சண்டிகர்: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போலீசார் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எல்லைகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்தும் விதமாக, துணை ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது. மேலும், உடனடியாக பணியில் சேரவும் ஆணையிடப்பட்டது.


இந்த நிலையில், பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாப்பிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், உடனடியாக பணியில் சேரவும் அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.


அதேபோல, விமான மருத்துவ சேவைகள் சங்கம் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் மேலாண்மை ஆய்வுகள் அகாடமியின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த இடங்களில் பணியமர்த்தினாலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement