விமான கழிப்பறையில் அடைப்பு ஜெர்மனியில் தரையிறக்கம்

புதுடில்லி:வட அமெரிக்க நாடான கனடாவுக்கு டில்லியில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வருகிறது. கடந்த 2ம் தேதி, கனடாவின் டொரான்டோவிலிருந்து டில்லிக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

பயணியர் அசவுகரியத்தை கருத்தில் வைத்து, விமானம் பிராங்பர்ட் நகரில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டை, ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம், பிராங்பர்ட் நகரில் தரையிறக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே புறப்பட்டு டில்லி சென்றதாக தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் ஏர் இந்தியா விமானம், கழிப்பறை அடைப்பு காரணமாக, வேறு நகருக்கு திருப்பிடப்படுவது இது இரண்டாவது முறை. கடந்த 5ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து டில்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்திலும் கழிப்பறையில் அடைப்பு ஏற்பட்டது. அப்போது, அட்லாண்டிக் பெருங்கடல் மேல் விமானம் பறந்து கொண்டிருந்தது.

பெரும்பாலான நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் இரவு நேரங்களில் தரையிறங்குவதில் கட்டுப்பாடு இருந்ததால், உடனடியாக விமானத்தை தரையிறக்க முடியவில்லை. 10 மணி நேரத்துக்கும் மேலாக வானில் பறந்த ஏர் இந்தியா விமானம் அடுத்த நாள் காலை, சிகாகோவில் தரையிறக்கப்பட்டது.

Advertisement