நாளை வெளியாகிறது 'ரிசல்ட்'; 9ம் வகுப்பு தேர்ச்சிக்கு கட்டுப்பாடு

கோவை; தமிழகத்தில், 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு முடிவு நாளை (மே 9) வெளியிடப்படுகிறது.

இடைநிற்றல் இருக்கக்கூடாது என்பதற்காக, எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. அதேநேரம், 9ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி தொடர்பாக, சில நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

9ம் வகுப்பில், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், காலாண்டு, அரையாண்டு அல்லது முழு ஆண்டு ஆகிய தேர்வுகளில் குறைந்தபட்சம் ஒரு தேர்வில் பங்கேற்றிருந்தால் தேர்ச்சி வழங்கப்படும். பொதுவாக, 35 மதிப்பெண் தேர்ச்சி அளவாக கருதப்படுகிறது.

சில மாணவர்களுக்கு, குறைந்தபட்சம் 20 முதல் 25 மதிப்பெண் பெற்றால் கூட தேர்ச்சி வழங்கப்படும். இது, பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தமுள்ள, 210 பள்ளி நாட்களில், 50 சதவீத நாட்கள் மட்டுமே வந்திருந்தாலும், பள்ளி திறக்கப்பட்ட பின், அவர்கள் பள்ளிக்கு வரும் பட்சத்தில், ஜூன் 15க்கு பின், அவர்களுக்காக உடனடி தேர்வுகள் நடத்தப்படும். முக்கியமான பாடப்பகுதிகளையும், முக்கிய வினாக்களையும் அடிப்படையாகக் கொண்டு சிறப்பு வகுப்பு அளிக்கப்படும்.

இத்தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement