'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரை தேர்வு செய்தது ஏன்?

புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக, பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பஹல்காம் தாக்குதலுக்கு பின், பாக்., பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக, இரவு - பகல் பாராமல் பிரதமர் மோடி உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரை தேர்வு செய்தது பிரதமர் மோடி தான். இந்த பெயர் மிகவும் உணர்வுப்பூர்வமானது. 'சிந்துார்' என்றால், திருமணமான ஹிந்து பெண்கள் நெற்றி வகிடில் வைக்கும் குங்கும திலகமாகும்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மதத்தை கேட்ட பின், ஆண்களை மட்டுமே சுட்டுக் கொன்றனர். இதில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் உட்பட, 26 பேர் உயிரிழந்தனர். மனைவியரின் கண் முன்னே, கணவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதனால், 25 பெண்கள் விதவையாகினர். கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்து, அதை வெற்றிகரமாக நடத்தி சாதித்து காட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட படத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதில், ஆங்கிலத்தில் இடம் பெற்ற O என்ற எழுத்துக்கு பதிலாக, ஒரு கிண்ணத்தில் குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின், குங்குமம் கொட்டிக் கிடக்கிறது.
இது, 25 பெண்களின் வாழ்க்கைத்துணையை பறித்த பாக்., பயங்கரவாதிகளின் இரக்கமற்ற தன்மையைக் குறிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை எப்படி திட்டமிடப்பட்டது; எப்போது தாக்குதல் நடந்தது; எங்கெங்கு தாக்குதல் நடந்தது என்பது உள்ளிட்டவற்றை மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்கினார். பிரதமர் மோடி கூறுகையில், ''இது ஒரு பெருமைக்குரிய தருணம். எந்த தவறும் இல்லாமல், பதிலடி தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி காட்டிய ராணுவத்துக்கு பாராட்டுகள்,'' என்றார்.ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு