போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு

கோவை : தமிழகம் முழுவதும் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சார்பில், 41 சிறப்பு பறக்கும் படை அமைக்கப்படவுள்ளது. இதற்கான கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மானியக்கோரிக்கையில், போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களை கொண்டு பறக்கும்படை மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பறக்கும்படை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தற்சமயம், சென்னை மற்றும் மதுரையில் பறக்கும் படை உள்ளன. இக்குழுவினரே மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 41 புதிய குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, போதைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் விதிமுறைகள் மீறி கடத்தல் மற்றும் விற்பனை, காலாவதியான மருந்துகள் விற்பனை, தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தும் கண்காணித்து, பறிமுதல் செய்யவுள்ளனர்.

தமிழக மருந்து கட்டுப்பாடு இயக்குனர் ஸ்ரீதர் கூறுகையில், ''தமிழகத்தில், 41 குழுக்கள் அமைக்க கருத்துரு அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பேர் இருப்பார்கள். ஒரு மாவட்டத்தில் புகார் பதிவானால், வேறு மாவட்டங்களில் உள்ள பறக்கும்படை நேரடி விசாரணையில் ஈடுபடுவார்கள். குழுக்கள் மாறி சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அரசாணை வெளியானதும் பறக்கும் படை பணிகளை துவக்கிவிடும். 26 மண்டலங்கள் உள்ளன; ஒவ்வொரு மண்டலத்திற்கும் செலவினங்களுக்காக, 50 ஆயிரம் ரூபாய் நிதி கேட்டு பரிந்துரைத்துள்ளோம். புகாரின் தன்மைக்கு ஏற்ப இக்குழுக்கள் விசாரணை மேற்கொள்ளும்,'' என்றார்.

Advertisement