குளத்தை மீட்ட இளைஞருக்கு  கிராம மக்கள், எம்.பி., பாராட்டு 

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில், ஆக்கிரமிப்பில் இருந்த குளத்தை மீட்ட இளைஞரை, எம்.பி., மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள இரண்டு குளங்களில், ஒன்று துார்வாரப்படாமலும், மற்றொரு குளம் அடையாளம் தெரியாத வகையில், நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், மீட்டு, துார்வார வேண்டும் என, கிராம மக்கள், எம்.பி., முரசொலியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, நீர்நிலைகளை துார்வாரி பாதுகாத்து வரும், பேராவூரணி அருகே நாடியம் கிராமத்தைச் சேர்ந்த நிமல் ராகவனை தொடர்பு கொண்ட முரசொலி, ஒக்கநாடு மேலையூரில் உள்ள குளங்களை துார்வாரி தர வேண்டும் என, கூறினார். தொடர்ந்து, கிராம மக்கள் உதவியுடன், மெகா பவுண்டேசன் குழுவினர், 3 லட்சம் ரூபாய் செலவில், துார்வாரும் பணியை முடித்தனர். இதில், பல ஆண்டுகளாக துார்ந்து போன குளமும், அருகில் ஆக்கிரமிப்பில் இருந்த மற்றொரு குளமும் மீட்கப்பட்டது.

இக்குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், எம்.பி., முரசொலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, 20 நாளில் இரண்டு குளங்களை துார்வாரிய நிமல்ராகவன் குழுவினருக்கு, எம்.பி., மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து நிமல்ராகவன் கூறியதாவது:

மெகா பவுண்டேஷன் சார்பில், இதுவரை, 254 நீர்நிலைகள் துார்வாரப்பட்டு உள்ளது. 255வது குளமாக, ஒக்கநாடு மேலையூரில் குளங்கள் துார்வாரப்பட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துார்வாரும் மண்ணை வெளியே கொண்டு செல்லாமல், கரைகளை பலப்படுத்துவது தான் நோக்கம். அதன்படி, கரைகளை பலப்படுத்தி மரக்கன்றுகளும், பனை விதைகளும் விதைக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து வாய்க்காலும் சீரமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement