ஈரோட்டில் 9 வழித்தடத்தில் புதிய அரசு பஸ்கள் இயக்கம்

ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், ஈரோடு மண்டலத்திற்கான ஒன்பது வழித்தடங்களின் புதிய பஸ்கள் இயக்க துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து புதிய பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர்

எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தனர்.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: ஈரோடு மண்டலத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்ட, 59 பஸ்களில் முதற்கட்டமாக எட்டு புதிய டவுன் பஸ்களும், மலைப்பகுதியில் இயக்கக்கூடிய ஒரு புதிய சிறிய புறநகர் பஸ்சும் வழித்தடத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 43 புறநகர் பஸ்கள், இரண்டு டவுன் பஸ்கள் மற்றும் மலைப்பகுதியில் இயக்கக்கூடிய ஒரு சிறிய பஸ் என, 46 பஸ்கள் புனரமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய பஸ்கள், அந்தியூர்--கொங்காடை (தாமரைக்கரை, ஒசூர் வழித்தடம்) புறநகர் பஸ்ஸாகவும், பவானி-
- பெருந்துறை (சித்தோடு, நசியனூர் வழித்தடம்), சூரம்பட்டிவலசு--பவானி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட்--சென்னிமலை, ஈரோடு பஸ் ஸ்டாண்ட்-சிவகிரி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட்--
திருச்செங்கோடு (சோலார், கொக்கராயன்பேட்டை வழித்தடம்), ஈரோடு பஸ் ஸ்டாண்ட்--பெருந்துறை, பவானி--ஈங்கூர், ஈரோடு பஸ் ஸ்டாண்ட்--துடுப்பதி என எட்டு டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு கூறினார்.
ஈரோடு மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி, அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் சிவக்குமார், துணை மேலாளர் (வணிகம்) ஜெகதீஸ், ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடியல் பயண திட்டத்தின் கீழ், ஈரோடு மண்டலத்தில், 304 டவுன் பஸ்களில் தினமும், 3.56 லட்சம் மகளிர் கட்டணமின்றி செல்கின்றனர். இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தாளவாடி மலைப்பகுதியில், 35 கி.மீ.,க்கு கீழ் இயக்கப்படும் ஒரு புறநகர் பஸ்சிலும் நடைமுறை ஆகியுள்ளது. இதில் தினமும், 682 மகளிர் வீதம் தற்போது வரை 1.51 லட்சம் மகளிர் பயணித்துள்ளனர்.

Advertisement