சிறு மழைக்கே தாக்குபிடிக்காத சாலை தேங்கும் மழைநீரால் பகுதியினர் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாமல்லன் கே.டி.எஸ். மணி தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மட்டுமின்றி எஸ்.பி.ஐ., வங்கி, தனியார் பள்ளி, வணிக நிறுனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

ரயில்வே சாலை, சண்முகா அவென்யூ, அசோக் நகர், மின் நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில் பெய்த லேசான மழையில் கே.டி.எஸ்., மணி தெருவில் குளம்போல தேங்கியுள்ள மழைநீர் சகதியாக மாறி அம்பேத்நகர் நகர் செல்லும் சாலை வரை மழைநீர் தேங்கியுள்ளது. கே.டி.எஸ்., மணி தெருவில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

மீண்டும் மழைபெய்தால், இப்பகுதியில் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது.

இச்சாலையில் நடந்து செல்வோர் சகதியாக மாறியுள்ள மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

காஞ்சிபரம் மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.

ஆனால், சாலையில் தேங்கும் மழைநீரை அகற்ற எந்தவித நடவடிக்கை எடுக்க வில்லை என, இப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மாமல்லன் நகர் கே.டி.எஸ்., மணி தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க, மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

உத்திரமேரூர்



உத்திரமேரூர் பேரூராட்சி, எம்.ஜி.ஆர்., நகரில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, போக்குவரத்து வசதிக்காக 20 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை பயன்படுத்தி, அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

இச்சாலையில் கட்டுமான பணிக்காக ஜல்லி, எம்.சான்ட் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் லாரிகளும் அடிக்கடி செல்கின்றன.

இதனால், தார்ச்சாலை சேதமடைந்து ஜல்லி பெயர்ந்த நிலையில் உள்ளது.

மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சேதமடைந்த சாலையால் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement