பூஜாரிகளுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

ராமநாதபுரம்:'கோவில் பூஜாரிகளுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என, ஹிந்து கோவில் பூஜாரிகள் பேரவை வலியுறுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தில் ஹிந்து கோவில் பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி கூறியதாவது:

கிராம பூஜாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்தும் இன்னும் பலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை. உடனடியாக வழங்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூஜாரிகளுக்கு நிலம் இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 24,000 ரூபாய் ஆகிய கட்டுப்பாடுகளால் பலர் ஓய்வூதியம் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். வயதான காலத்தில் சிரமப்படும் பூஜாரிகளுக்கு நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மேலும், மாதாந்திர ஓய்வூதியத்தை 4,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். கோவில்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். மார்கழி மாத பூஜைக்கு ரேஷனில் இலவசமாக அரிசி தர வேண்டும்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரத்தில், வரும் மே 17ல் போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement