கந்தஹார் விமான கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் பலி

புதுடில்லி : 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலில் பாக்., பயங்கரவாத முகாம்கள் மீது நம் ராணுவம் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தியது.

பஹவல்பூரில் ஜெய்ஷ் - இ - முஹமது பயங்கரவாத முகாம் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் பலியாகினர்.

இதில், மசூத் அசாரின் சகோதரரும், ஜெய்ஷ் - இ - முஹமது அமைப்பின் தளபதியுமான அப்துல் ரவுப் அசாரும் ஒருவர். தாக்குதலில் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 1994ல், காஷ்மீரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக மசூத் அசாரை கைது செய்த மத்திய அரசு சிறையில் அடைத்தது.

இதைத் தொடர்ந்து, 1999ல் நம் அண்டை நாடான நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து டில்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஐ.சி., 814 என்ற விமானத்தை, ஐந்து பயங்கரவாதிகள் கடத்தினர்.

அதிலிருந்த 190 பயணியருடன் விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு திருப்பிவிடப்பட்டது.

பணயக் கைதிகளுக்கு ஈடாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டதன் வாயிலாக அந்த நெருக்கடி முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர், இறந்த அப்துல் ரவுப் அசார்.

மசூத் அசார் தலைமறைவான பின், ஜெய்ஷ் - இ - முஹமது அமைப்பின் அன்றாட நடவடிக்கைகளை அப்துல் ரவுப் நிர்வகிக்க துவங்கினார். ஜம்மு - காஷ்மீரில் அந்த அமைப்பிற்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்த்தல், தாக்குதல்களை ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2001ல் நடந்த பார்லிமென்ட் தாக்குதல், 2000ல் ஜம்மு - காஷ்மீரின் சட்டசபை மீதான தாக்குதல், 2016ல் பதான்கோட்டில் உள்ள விமான தளத்தின் மீதான தாக்குதல், 2019ல் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத சம்பவங்களில் அப்துல் ரவுப் அசாருக்கு தொடர்புள்ளது.

Advertisement