பஞ்சாப், ராஜஸ்தானில் உஷார் நிலை

பஞ்சாப் 532 கி.மீ., தொலைவையும்; ராஜஸ்தான் 1,070 கி.மீ., தொலைவுள்ள எல்லையையும் பாகிஸ்தானுடன் பகிர்கின்றன.

இந்நிலையில், பஞ்சாப் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை நிர்வாக காரணங்களுக்காக மே 7 முதல் ரத்து செய்து டி.ஜி.பி., அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து பஞ்சாபின் ஆறு எல்லை மாவட்டங்களான பெரோஸ்பூர், பதான்கோட், பாசில்கா, அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் டார்ன் தரன் ஆகிய இடங்களில், அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளன. எல்லை முழுதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர், பிகானீர், ஜெய்சல்மார் மற்றும் பார்மர் ஆகிய எல்லையோர மாவட்டங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன.

எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, விடுமுறையில் உள்ள போலீசாரின் விடுமுறையை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநிலம் முழுதும் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement